தெலங்கானாவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ வலியில் வந்த பெண்ணிற்கு வயிற்று வலி மருந்துகள் கொடுத்து அனுப்பிவைக்கப்பட்டு, அவர் அருகிலேயே சாலை ஓரத்தில் குழந்தையை பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அவ்வழியே சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, அச்சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிசு மரணங்களைக் குறைப்பதில் தெலங்கானா மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தாலும், தற்போது நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நண்பகலில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேட்சல் மல்கஜகிரி மாவட்டத்தின் ஜவகர் நகர் பகுதியில் உள்ள பாலாஜி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கர்ப்பமாக இருந்த அப்பெண் வயிற்று வலியின் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று இருக்கிறார். அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர், வயிற்று வலிக்கான மருந்துகளை கொடுத்து அப்பெண்ணை அனுப்பியுள்ளனர். இந்நிலையில் அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகிலேயே, சாலையோரத்தில் குழந்தையை பிரசவித்துள்ளார். ஆனால் பிறந்த சில நொடிகளிலேயே அந்தக் குழந்தை இறந்துவிட்டது.
சாலையில் நடந்துச் சென்ற ஒருவர் இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் இச்சம்பவம் குறித்து கூறப்பட்டுள்ளது.